சீரற்ற காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு
நாட்டில் நிலவியுள்ள சீரற்ற காலநிலை இன்று மாலையுடன் சற்று குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நீர் தேக்கங்கள் பலவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
அதன்படி காசல்ரீ, மற்றும் மௌஷாகலை ஆகிய நீர் தேக்கங்கள் வான் பாய்ந்துள்ளதாக நீர்பாசன பொறியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விமலசுரேந்த், லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்ப்பிட்டிய, சமனல ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதேவேளை அதிக மழை காரணமாக கெனியன் நீர் தேக்கத்தின் 3 வான்கதவுகளும் லக்ஷபான நீர் தேக்கத்தின் வானதகவுகள் சிலவும் பல மணித்தியாலத்திற்கு திறக்கப்பட்டிருந்ததாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீரற்ற வானிலையால் கற்பிட்டியிலிருந்து வென்னப்புவ வரையிலான கரையோர பகுதிகள் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் சிலாபம், ஆராச்சி கட்டு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதி இதனால் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலை நீடிக்கமாயின் எதிர்வரும் நாட்களில் கரையோரத்தை அண்மித்துள்ள குடியிருப்புக்களும் சேதமடையும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.