மாணவிகள் , இளம் பெண்களை மிரட்டி ஆபாச படங்கள்; இணையத்தில் பதிவிட்ட அம்பாறை இளைஞன்
கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அம்பாறை சேர்ந்த இந்தச் சந்தேகநபர், பிபில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

சுமார் 700 இளம் பெண்களின் தொலைபேசி எண்கள்
ஆரம்பத்தில் பெண்களுடன் நட்பாகப் பழகி, பின்னர் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் Edit செய்து, அவற்றைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
இவ்வாறு மிரட்டி, அந்தப் பெண்களிடமிருந்து மேலும் பல தனிப்பட்ட புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, சுமார் 700 இளம் பெண்களின் தொலைபேசி எண்கள் மற்றும் சிலரின் தனிப்பட்ட (ஆபாசமான) புகைப்படங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தனது அடையாளத்தை மறைக்க, டெலிகிராம் கணக்குகளில் போலிப் பெயர்களைப் பயன்படுத்தியதுடன், அழைப்புகள் வராதவாறு அமைப்புகளையும் (Settings) அவர் மாற்றியமைத்திருந்தார்.
பயம் மற்றும் அவமானம் காரணமாகப் பல மாணவிகள் புகார் அளிக்க முன்வராத நிலையில், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிபில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து CID தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது பெண்கள் மற்றும் மாணவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.