யாழ் செல்லும் புலம்பெயர் தமிழர்களே அவதானம்; இந்த பெண்ணிடம் சிக்கினீர்களா?
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் நேற்றைய தினம்(21) கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மோசடியாக பெற்றிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் வசூல்
யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி , கல்வியங்காடு , கோப்பாய் , கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து செல்லும் இப் பெண், மோசடியாக பணம் பெற்றுள்ளார்.
தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது எனவும் கூறி போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து யாழிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (18) கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் , தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார்.
பெண்ணுக்கு பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர் , அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே , குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளமையை தெரியவந்துள்ளது.
அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் புலம்பெயர் தமிழர், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதுடன் பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம் , பெண் தொடர்பான அடையாளங்களையும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
அதனடிப்படையில் மோசடி பெண்ணை கைது செய்டஹ் பொலிஸார் , பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் , யாழ்ப்பாணம் வரும் புலமபெயர் தமிழர்கள் , தாம் கஸ்ரப்பட்டு சம்பாதித்த பணத்தை இவ்வாறான மோசடி செய்யும் நபர்களிடம் கொடுத்து ஏமாறாதீர்கள் என சமூக ஆர்வர்கள் கூறியுள்ளனர்.