இரண்டு வருடங்களாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த விமானப்படை வீரர் கைது
ஹிங்குராங்கொட பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விமானப்படை சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது , ஹிங்குராங்கொட பகுதியில் அண்மைகாலமாக இடம்பெற்தாக கூறப்படும் வீட்டுக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விமானப்படை சிப்பாய் ஒருவரும் அவருக்கு உதவி ஒத்தாசைகளை புரிந்த பிறிதொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சிசிரிவி காணொளி காட்சிகள் ஊடாகவும் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தியும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. அதற்கமைய இரு வருடகாலமாக இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பரில் விமானப்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது கொள்ளையிட்ட பணத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட கெப் ரக வாகனம் ஒன்றும் மிளகாய் அரைக்கும் இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கொள்ளையிடும் தங்க நகைகளை உருக்கிய பின்னரே , அவற்றை விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
இதன்போது அவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த நபரொருவருக்கே , அந்த நகைகளை விற்பனை செய்துள்ளதுடன் குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சந்தேக நபரான சிப்பாய்க்கு இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களின் போது உதவி ஒத்தாசைகளை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.