யாழில் வங்கியில் உயிரிழந்த முதியவரால் பரபரப்பு
யாழில் ஓய்வூதிய பணத்தை பெற சென்ற முதியவர் ஒருவர், வங்கியிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பளை கொல்லன்கலட்டி பகுதியைச் சேர்ந்து சுப்பிரமணியம் காசிநாதர் (81) என்ற முதியவர், தனது ஓய்வூதிய பணத்தை பெற்றுக்கொள்வதற்காக குறித்த வங்கிக்கு சென்றுள்ளார்.
வங்கிக்குள் சென்ற அவர் , பணத்தை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச் சிட்டை நிரப்பி வங்கி உத்தியோகத்தரிடம் கொடுத்து விட்டு, வாடிக்கையாளர் காத்திருக்கும் ஆசனம் ஒன்றில் அமர்ந்திருந்துள்ளார்.
இந்நிலையில் அவரின் ஓய்வூதிய பணத்தை வழங்குவதற்காக அவரது பெயரை வங்கி உத்தியோகத்தர் பலதடவைகள் அழைத்தபோதும் பதிலிருக்கவில்லை. இதையடுத்து, சந்தேகம் கொண்ட வங்கி ஊழியர்கள் முதியவருக்கு அருகில் சென்று, அவரை அழைத்தபோதும், முதியவர் எதுவித அசைவுகளும் இன்றி கதிரையில் இருந்து சரிந்து வீழ்ந்துள்ளார்.
இதையடுத்து முதியவர் உயிரிழந்ததை ஊகித்த வங்கி அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவலை தெரியப்படுத்தியிருந்ததுடன் வங்கியின் செயற்பாடுகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.