இலங்கைக்கு கடன் மன்னிப்பு வழங்குவதுத் தொடர்பில் ஆலோசனை!
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியடையாமல் சவால்களை எதிர்கொள்ளவேண்டும் என இலங்கையிடம் தெரிவித்துள்ள பிலிப்பைன்சின் நிதியமைச்சர் பெஞ்சமின் ஈ டியோகோனோ, இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
கொவிட் பெருந்தொற்றின் பின்னர் பிலிப்பைன்ஸ் எதிர்கொண்ட பொருளாதார சவால்களை நினைவுகூர்ந்துள்ள அந்த நாட்டின் நிதியமைச்சர் வலுவான கட்டமைப்பு சீர்திருத்தங்களே நாடு மீண்டும் வலுவான நிலைக்கு வருவதற்கு உதவியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும் இல்லாவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் பலவீனமாகவே காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது முன்னர் இடம்பெற்றுள்ளது தற்போதும் அதனை செய்யலாம் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை தனது வளங்களை திரட்டுவதை மதிப்பீடு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை செய்தால் இலங்கையால் சர்வதேச நிதியமைப்புகளின் உதவிகளை பெறுவது இலகுவாக அமையும் எனவும் பிலிப்பைன்ஸ் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.