நடிகர் விவேக்கின் கடைசி விருது; மகள் வெளியிட்ட பதிவு
சின்னக் கலைவாணர் என்று மக்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகர் விவேக் தனது காமெடி மூலம் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளார். தனது திரைப்படங்களில் சமூக கருத்துக்களை காமெடி கலந்து கூறுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
அத்துடன் அவர் ஒரு நடிகராக மட்டுமல்லாது சமூக சேவகர் ஆகவும் இருந்து வந்தார். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது பற்றுக்கொண்ட இவர் கிரீன் கலாம் எனும் திட்டத்தின் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதே இவரது வாழ்நாள் ஆசையாகும்.
இதன் மூலம் மாணவர்களையும் இளைஞர்களையும் மரக்கன்றுகளை நட ஊக்கப்படுத்தி வந்தார். இதுவரை முப்பத்தி மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நிலை சரியில்லாத காரணமாக மரணமடைந்தமை பொதுமக்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும் இளைஞர்களும் மாணவர்களும் அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்வோம் என்று உறுதி கூறினர்.
இவர் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற படம் வெளியானது. அந்தப் படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். இந்த நிலையில் தற்பொழுது சைமா கடந்த ஆண்டுக்கான விருதினை வழங்கியுள்ளது.
இதில் நடிகர் விவேக் சிறந்த காமெடி நடிகருக்கான விருதை தாராள பிரபு படத்திற்காக பெற்ற நிலையில் அவ்விருதினை நடிகர் யோகிபாபு விவேக்கின் சார்பாக பெற்றுக்கொண்டார்.
இச்செய்தியினை நடிகர் விவேக்கின் ட்விட்டர் பக்கத்தில் அவருடைய மகள் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ,தன்னுடைய அப்பா விருதினை பெற்றதற்கு தாராள பிரபு குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விருதினை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்த நடிகர் யோகிபாபுவிற்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்து நடிகர் விவேக்கின் மகள் தெரிவித்துள்ளார்.