அமைச்சரவையில் இருந்து அதிரடியாக துாக்கி எறியப்பட்ட கம்மன்பில மற்றும் வீரவங்ச
அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் பதிகள் பறிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாரச்சி மின்சக்தி அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேவேளை பவித்ரா வன்னியாராச்சியின் போக்குவரத்து அமைச்சு பதவி ராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகமவுக்கு வழங்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது.
அமைச்சர்கள் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தை விமர்சித்து வருவதால், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியாரை பதவிகளில் இருந்து நீக்குமாறு, பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதேவேளை நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, வீரவங்ச, கம்மன்பில ஆகியோர் உரையாற்றி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.