20 ரூபாவிற்காக இலட்சம் ரூபாவை இழந்த வர்த்தக நிலையம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அரச கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, பொத்துவில் நீதவான் நீதிமன்றம் 100,000/= ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பதிகாரியால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலை
1500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தலின் கட்டுப்பாட்டு விலை 130/- ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வர்த்தக நிலையம் அதனை 150/- ரூபாவிற்கு விற்பனை செய்ததாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் நீதிமன்றத்தின் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான், குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு 100000/= ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.