பதுளையில் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியர்!
பதுளையில் காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (20-03-2023) காலை 7.30 மணியளவில் பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த 39 வயதான பரணிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இடம்பெற்றுள்ளது.
பதுளை - செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
பசறை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் பேருந்து விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.