திடீரென உடைந்து விழுந்த வீடு; தெய்வாதீனமாக உயிர்பிழைத்த தம்பதி
வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் பகுதியில் வீடு ஒன்று வெள்ளிக்கிழமை (19) உடைந்து வீழ்ந்தநிலையில் அதிஸ்டவசமாக இருவர் உயிர் பிழைத்தனர். குறித்த வீட்டில் இன்று (19 மதியம் கணவனும் மனைவியும் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது வீடு திடீர் என்று உடைந்து வீழ்ந்தது.குறிப்பாக வீட்டின் பின்பக்க சுவர் மற்றும் கூரைப்பகுதி என்பன முற்றாக உடைந்து வீழ்ந்தது.
கணவனும் மனைவியும் வீட்டிற்கு வெளியில் இருந்தமையால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது.
இதேவேளை சிறிநகர்பகுதியில் 1996 ஆம் ஆண்டு பொதுமக்கள் குடியேற்றப்பட்ட நிலையில் 50 ற்கும் மேற்ப்பட்ட வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கின்றது.
தமக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குமாறு பல்வேறு தரப்புக்களிடமும் பலமுறை கோரிக்கை முன்வைத்துள்ள நிலையிலும் அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று கிராமமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.