பிள்ளையானுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்!
எனது பெயரில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் காணிகள் உள்ளன என்றால் அதற்கான ஆதாரங்களை பிள்ளையான் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலநாதன் மதிமேனன் சவால் விடுத்துள்ளார்.
ஊடக அறிக்கை
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அவர் பகிரங்க சவால் விடுத்துள்ளார். அந்த ஊடக அறிக்கையில்,
‘கடந்த 22.11.2022 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தில் எனது தனிப்பட்ட பெயரிலே சுமார் 7 ஏக்கர் அரச காணியை முறையற்ற விதத்தில் கையகப்படுத்தியுள்ளேன் என தனது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டார்.
இதனை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். உரிய ஆதாரங்கள் இன்றி உயரிய சபையில் எனக்கு எதிராக இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதோடு எனது தனிப்பட்ட நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தனின் நாடாளுமன்ற உரை அமைந்துள்ளது.
குறித்த மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலகத்தில் எனது பெயரில் எந்த விதமான அரச காணியும் இல்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.
மேலும், குறித்த காணி எனது பெயரிலே நான் நிர்வகிக்கின்றேன் என்றால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு பகிரங்கமாக சவால் விடுகின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.