கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழ்ப்பெண் எழுதிய மனதை வருடும் சுயசரிதை!
இலங்கை தமிழ் பெண்ணான மீரா பாலா, கனடா, ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் வாழும் மீரா பாலாவுக்கு புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் படித்த புத்தகங்களில் இருந்த கதாபாத்திரங்கள் அவரைப் போல இல்லை. அத்துடன், கனடாவிலும் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட, பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட புத்தகங்களும் அதிகம் இல்லை.
இந்நிலையில் , மீரா பாலா தன் கதையையே புத்தகமாக எழுதத் துவங்கினார். இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தபோது, தான் எதிர்கொண்ட போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, அந்த புத்தகத்தை எழுதியுள்ளார் மீரா. இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது இலங்கையில் வாழ்ந்த மாயா என்ற சிறுமி, தன் நாடு போரால் சின்னபின்னமாவதைக் கண்ணால் காண்கிறாள்.
அமைதியும் பாதுகாப்பும் நாடி கனடாவுக்கு புலம்பெயர்கிறது மாயாவின் குடும்பம். அங்கும் சவால்கள் காத்திருக்கின்றன. மொழிப் பிரச்சினை பெரும் தடையாக, இருந்ததால் அவளால் ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் பேசும் சக மாணவ மாணவிகளுடன் உரையாட முடியவில்லை. இதன் காரணமாக யாரும் அவளுக்கு நண்பர்களாகவும் முன்வரவில்லை. புத்தகத்தில் இது மாயாவின் கதையானாலும், உண்மையில் அது மீராவின் கதை என கூறப்படுகின்றது.
9 வயதாக மீரா புலம்பெயர்ந்த 1980களில், ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் கனடாவில் அதிகம் இல்லை. ஒரு முறை கண்ணீர் விட்டுக் கதறி, தன் பெற்றோரைப் பார்த்து, நம் நாட்டுக்குப் போவோம் வாருங்கள் என கூறுகையில், இதுதான் நம் புதிய தாய்நாடு, நீ கஷ்டப்பட்டு உழைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என மீராவை தேற்றியுள்ளனர். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளத் துவங்கிய மீரா, ஆங்கிலம் கற்பதன் மூலம் தைரியத்தை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றும் மீரா, தான் அனுபவித்த அதே பிரச்சினைகளை இன்றும் அனுபவிக்கும் புலம்பெயர்ந்த சிறுவர் சிறுமியரை தினமும் காண்கிறார்.
இந்நிலையில் என் வகுப்பில் ஏராளம் ஆசிய நாட்டவர்களான மாணவ மாணவிகள் இருக்கிறார்கள் என்று கூறும் மீரா, ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக எடுக்கும் மாணவ மாணவிகள் மற்றவர்களை விட குறைந்தவர்கள் என யாராவது கூறினால், நான் அவர்களுக்கு என்னுடைய கதையைக் கூறுகின்றேன் என மீரா தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் மீரா எழுதிய Palm Trees Under Snow என்ற அந்தப் புத்தகம், புலம்பெயர் சிறுவர்கள் தங்களை அப்புத்தகத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பிள்ளைகளும், புலம்பெயர்தல் வாழ்க்கை குறித்து அறிந்துகொள்ள உதவியாக உள்ளதாக பத்திரிகையாளரான Scarlett Liu என்பவர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .