இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல்
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று (மே 06) 324 ரூபாய் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூர்அப்படுகின்றது.
அதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாயின் பெறுமதி இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

பலவீனமான வெளிநாட்டு இருப்பு மற்றும் கடன் சுமை
இது நாட்டின் பலவீனமான வெளிநாட்டு இருப்பு மற்றும் கடன் சுமை தொடர்பில் புதிய கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.40 ரூபாயாகவும், விற்பனை விலை 324.03 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.
உலக சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகின்றது. பொருளாதார நிபுணர் கலாநிதி கெனத் டி சில்வா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
ரூபாயின் இந்த வீழ்ச்சியானது இலங்கையின் நிகர சர்வதேச முதலீட்டு நிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். அத்துடன், இலங்கையிடம் தற்போது 66.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்கள் உள்ளன.
ஆனால், நாட்டின் வெளிநாட்டுச் சொத்துக்களின் மதிப்பு 16.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமேயாகும்.
இந்த நிலையில், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது, டொலர் அடிப்படையில் கடன் மாறாவிட்டாலும், உள்நாட்டு ரூபாய் அடிப்படையில் அக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான செலவு சடுதியாக அதிகரிக்கும். இது நாட்டின் ஒட்டுமொத்த நிதி நிலைமையையும் மேலும் மோசமடையச் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஏற்கனவே அதிக வரிச் சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்த ரூபாய் வீழ்ச்சி மேலதிக நெருக்கடியைக் கொடுக்கும் என கலாநிதி டி சில்வா எச்சரித்துள்ளார்.
இது போக்குவரத்து மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டின் நிதி நிலைமையை மேலும் இறுக்கமடையச் செய்யும்.
சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் மூலம் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அண்மைக் காலங்களில் முன்னேற்றம் கண்டிருந்த போதிலும், இவ்வாறான நாணய வீழ்ச்சிகள் பொருளாதார மீட்சியில் பாரிய சவால்களைத் தோற்றுவித்துள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.