மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் இல்லையா; களேபரமான திருமண வீடு!
திருமண விருந்தில் மாப்பிள்ளை தோழர்களுக்கு அப்பளம் கொடுக்காததால் திருமண வீடே கொதித்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கேரளா மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. திருமணத்தில் மாப்பிள்ளையின் நெருங்கிய தோழர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் திருமணம் முடிந்து மண்டபத்தில் விருந்து தொடங்கியது.
அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனையடுத்து ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் இல்லையா
மாப்பிள்ளையின் தோழர்களுக்கே அப்பளம் இல்லையா? என்று மாப்பிள்ளையின் உறவினர்களும் அங்கே திரள, விருந்து நடந்த மண்டபம் களேபரமானது. இதன்போது மாப்பிள்ளை தோழர் ஒருவர் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க அதனை பெண் வீட்டாரும், மண்டப ஊழியர்களும் தட்டி கேட்டனர்.
இதில் பிரச்சினை பெரிதாக அங்க கோஷ்டி மோதல் ஏற்பட்டதனால் மாறிமாறி இரு தரப்பினரும் மோதி கொள்ள மண்டப ஊழியர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனை கண்டு மண்டபத்தில் இருந்த உறவினர்கள் சிதறி ஓடியதை அடுத்து தகவல் அறிந்து அப்பகுதி பொலிசார் மண்டபத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
இந்த சம்பவத்தை திருமணத்திற்கு வந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலாகி வருகின்றது.