நடுக்கடலில் இடம்பெற்ற மோதலில் மீனவர் ஒருவர் பலி
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற சஹான் புத்தா என்ற நெடுநாள் மீன்பிடி படகில் ஏற்பட்ட முறுகல் நிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் இடம்பெற்ற மோதலில் , படகில் இருந்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதாக பேருவளை கடற்றொழில் பரிசோதகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸில் முறைப்பாடு
பேருவளை சுங்க வீதியில் வசிக்கும் சுமணசிறி பெர்னாண்டோ என்ற படகின் உரிமையாளரால் இந்த சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் சடலம் பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 180 கடல் மைல் தொலைவில் இருந்து அதே படகில் பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் மக்கொன, மாகல்கந்த, ரொக்லண்ட் வத்தையை சேர்ந்த எம்.கே.சந்தன உபுல் என்ற நபரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.