முன்னாள் இராணுவ சிப்பாய் செய்த மோசமான செயல்
ராகம, தலகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மூதாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை தீ வைத்து எரித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் ராகம பொலிஸாரால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ராகம, தலகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார்.
கொலைச்சம்பவம்
முன்னாள் இராணுவ சிப்பாய் கடந்த 05 ஆம் திகதி ராகம, தலகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்துள்ள நிலையில் அங்கிருந்த 76 வயதுடைய மூதாட்டி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், மூதாட்டியின் கணவரும் மகனும் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ள நிலையில், மூதாட்டி சடலமாக கிடப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாய் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றிற்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக குறித்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருட முயன்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.