1½ வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள் ; உடைக்கப்பட்ட கைகள் ; காதலனுடன் பெற்ற தாய் செய்த பெரும் கொடூரம்
இந்தியாவின் கேரளாவில் ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் உடலில் 91 இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. குழந்தையை கொன்றதாக தாயும், அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், அர்ஷித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

உடலில் பல இடங்களில் காயங்கள்
குழந்தை சாப்பிடும்போது உணவு தொண்டையில் சிக்கி, மயங்கி விட்டதாக சொல்லி குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால், சந்தேகமடைந்த வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வைத்திய அறிக்கையின்படி, குழந்தையின் மரணம் தற்செயலானது அல்ல என்பதும், அது திட்டமிட்ட படுகொலை என்பதும் உறுதியானது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் மற்றும் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
குழந்தையின் இரண்டு கைகளும் ஏற்கனவே உடைந்து, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. குழந்தையின் தலையை சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளார் தாயின் காதலன்.
இந்த தாக்குதலால் ஏற்பட்ட மூளை மற்றும் உட்புற உறுப்புகளின் ரத்தப்போக்கு காரணமாகவே குழந்தை இறந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
தனது காதலரால், குழந்தை சித்திரவதை செய்யப்படுவது தாய்க்குத் தெரிந்தும், அவர் அதைத் தடுக்காமலும், பொலிஸாருக்கு தெரிவிக்காமலும் இருந்துள்ளார்.
மேலும் குற்றத்தை மறைக்க வீட்டில் இருந்த ரத்தக் கறைகளைக் கழுவி, குழந்தையின் துணிகளையும் சேர்ந்து எரித்து இருக்கிறார். குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களையும் அவர்கள் அழிக்க முயன்றுள்ளனர்.
ஒன்றரை வயது குழந்தையை தாயும், அவரது காதலரும் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.