வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 76 பேர் கைது
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 20 டிங்கி படகுகள் மற்றும் 76 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மே 26 முதல் ஜூன் 7 வரையான காலப்பகுதியில் கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்
அதற்கமைய யாழ்ப்பாணம், கடைக்காடு, புதுமாத்தளன், திருகோணமலை, கல்லடிச்சேனை, கோகிலாய், சேப்பல் தீவு, கொட்பே, பொடுவகட்டு, குச்சவெளி, மட்டக்களப்பு ஆகிய கடற்பரப்புகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியமை, மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி இரவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக குறித்த சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் 20 டிங்கி படகுகளையும் 17 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், திருகோணமலை, ஈச்சலம்பற்று, முல்லைத்தீவு, குச்சவெளி, கொட்பே மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.