வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி; வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை
வடமாகாணத்திலிருந்து கிழக்கு நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டதாக தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை வழங்கிய யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி கண்டன பேரணி இடம்பெற்றது.
முதல் அறிக்கை தாக்கல்
இந்நிலையில் தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால், யாழ்.நீதவான் நீதிமன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதனடிப்படையில் குறித்த 7 பேருக்கும் நீதிமன்றினால், இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு மன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டவர்கள் மன்றில் முன்னிலையானார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் , மன்றில் முன்னிலையானவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்து சமர்ப்பணம் செய்தனர்.
அத்துடன், அடிப்படையிலேயே இந்த வழக்கினை மன்று தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசணையை கோருமாறும் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
அதனையடுத்து 7 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, மே மாதம் 08 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான , சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மற்றும் மூத்த சட்டத்தரணி என். ஶ்ரீகாந்தா ஆகியோர் முன்னிலையாகினர்.