03 நாட்களுக்குப் பின் மண்ணுக்குள் கேட்ட அழுகுரல் ; நேபாள பேரழிவில் 6 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம்
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ராசுவா மாவட்டத்தின் திமுரே கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மீட்புப் படை
போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியும் நிறைந்திருந்தது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவல் படையினர், மண்ணுக்கு அடியில் இருந்து மெல்லிய அழுகுரல் கேட்பதை கவனித்தனர்.
உடனடியாக அந்த இடத்தில் தோண்டத் தொடங்கிய அவர்கள், மண்ணுக்குள் சிக்கியிருந்த சிறுமியை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.
முதலில் திமுரே எல்லை பாதுகாப்பு முகாமில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக காத்மாண்டுவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் தாமதமானாலும், வானிலை சீரானதும் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிறுமியின் பெயர் மணிஷா மகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த மீட்பு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.