புத்தளம் கடற்பகுதியில் பாரியளவிலான கடலட்டையுடன் சிக்கிய 6 பேர்!
இலங்கைக்கு கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாரியளவிலான கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
புத்தளம், கற்பிட்டி - உச்சமுனை பகுதியில் இவ்வாறு கடலட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் உச்சமுனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, 71 உரப் பைகளில் 2032 கிலோ கிராம் கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இந்த கடலட்டைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட 3 டிங்கி இயந்திர படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் பயணம் செய்த 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரும் 21 வயது முதல் 43 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் கற்பிட்டி மற்றும் தலவில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேக நபர்கள் 6 பேரும், கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் 3 டிங்கி இயந்திர படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.