இலங்கைக்கு கடத்த முயன்ற 290 கிலோ கஞ்சா பறிமுதல் ; இரு இளைஞர்கள் கைது
தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் இருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இராமேஸ்வரம் உட்கோட்ட குற்றப்பிரிவு பொலிஸார் பிரப்பன்வலசை கடற்கரை அருகே நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்த போது 290 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த கஞ்சா தொகை மதுரையில் இருந்து கடத்தி வரப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் காற்று குறைவாக வீசும் நேரத்தில் படகில் இந்த கஞ்சா தொகையை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.