யாழில் கைது செய்யப்பட்ட 25 பெண்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
யாழ் புத்தூரில் இரு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 31 பேரில் 25 பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய 6 ஆண்களையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் புத்தூர் கலைஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இரண்டு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்ததுடன் இரு இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற அடிப்படையில் 21 வயது தொடக்கம் 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடுகளின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில், காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் 25 பெண்கள் உட்பட 31 பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.