கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்கள் விடுவிப்பு
அடாத்தாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும், பருத்தித்துறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு அவர்கள் மீளவும் இலங்கை கடல் எல்லைக்குள் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டால் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.
அதேவேளை, மீனவர்கள் பயணித்த படகுகள் இரண்டு, இழுமடி உட்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படுவதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட மீனவர்களை தாயகம் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையை இந்தியத் துணைத்தூதரகம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.