2024 ஐ.பி.எல்லில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்!
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (26-05-2024) இடம்பெறவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.
நடப்பு ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை மைதானத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி, 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் துருவ் ஜூரல் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் பந்து வீச்சில் Shahbaz Ahmed மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி, 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 36 ஓட்டங்களால் வீழ்த்தி ஐதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.