ஊழல் குற்றச்சாட்டுகள் ; முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது
இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவரும் கைதாகியுள்ளனர்.
அதிகாரிகள் , இன்று (3) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹானாம அபேவிக்ரம இன்று காலை 9.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
அதேபோல, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் சரத் சந்திர குணரத்ன ஜயதிலக்கவும் இன்று காலை 10.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹானாம அபேவிக்ரமவும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரான சரத் சந்திர குணரத்ன ஜயதிலக்கவும் இன்று (3) கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.