களவாக வெளிநாடு செல்ல சமபோசாவுடன் பதுங்கியிருந்த 3 கர்ப்பிணிகள் உள்ளிட்ட17 பேர் அதிரடிக்கைது!
மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரோலியாவுக்கு படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த 17 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படகில் எடுத்துச்செல்ல உணவுப்பக்கற்றுக்கள்
மட்டக்களப்பு -கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை கிடைத்த ரகசிய தகவலுக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.
இதன்போது ஆள்கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து அவர்களை அழைத்துவந்து மட்டக்களப்பு சுவிஸ்கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்கவைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் 3 சிறுவர்கள் 3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவிபுரிந்துவந்த ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்தனர்.
அத்துடன் படகு மூலம் செல்வதற்காக கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த சமபோச பக்கற்கள், பிஸ்கற் பக்கற்கள் சீனி போன்ற பொருட்கள் மற்றும் ஆடைகளையும் மீட்டுள்ளார்கள்.
இதனையடுத்து கைதானவர்கள் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
அதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலாவிற்கு இலங்கையர்கள் எவரும் பிரவேசிக்க கூடாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல்ஸ்டீபன்ஸ் ( Paul Stephens) கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.