கொழும்பில் பெரும் மோசடியில் ஈடுபட்ட16 சீனர்கள் ; பொலிஸார் அதிரடி
இலங்கையில் விசா விதிகளை மீறி தங்கியிருந்து, இணையதளம் ஊடாக பாரியளவிலான பிரமிட் நிதி மோசடியில் ஈடுபட்ட 16 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு , ஜாவத்தை வீதி மற்றும் டொன் கரோலிஸ் வீதி ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்ட சீனர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள நபர்களை இலக்கு வைத்து மோசடி
கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்கள் 23 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கறுவாத்தோட்டம் காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 23 மடிக்கணினிகள் ,11 கைபேசிகள் ,09 குரல் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் , வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இலங்கையில் தங்கியிருந்து கொண்டு, வெளிநாடுகளில் உள்ள நபர்களை இலக்கு வைத்து இந்தப் பிரமிட் மோசடியை முன்னெடுத்து வந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.