13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
17 இந்திய மீனவர்களும் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைகள்
கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் ஆஜர்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து விசாரனைகள் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (07) மீண்டும் வழக்கு விசாரணைகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.
விசாரணை முடிவில் குறித்த 17 இந்திய மீனவர்களில் இரு மீனவர்களுக்கு கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத காரணங்களினால் இரண்டு மீனவர்களையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும்,மேலும் இரண்டு மீனவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்திற்காக இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஏனைய 13 பேருக்கு 50 ரூபாய் தண்ட பணத்துடன் கூடிய இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு 13 பேரையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.