சம்பந்தன் ஏன் இப்படிக் கூறியது! என்ன நடந்தது?
2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்த தீர்வு யோசனைகளை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய சம்பந்தன் 13 ஐ தும்புத் தடியாலும் தொட்டுக்கூடப் பார்க்கமாட்டோம் என்று கூறியிருந்தார்.
மகிந்த ஜனாதிபதியாக இருந்தபோது புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தி இழுபறிப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சுதந்திரக் கட்சி தீர்வு யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாகச் சமர்ப்பித்திருந்தது. அந்த விவாதத்தின்போது 13 இன் குறைபாடுகள் பற்றியும் சம்பந்தன் நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் சம்பந்தன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையை, நான் நாடாளுமன்றச் செய்தியாளராக இருந்தபோது முழுமையாக வீரகேசரியில் எழுதியிந்தேன்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை ”தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த அடி என்றுதான் நான் சம்பந்தனின் உரைக்கு வீரகேசரிச் செய்தியில் தலைப்பிட்டிருந்தேன்- ஆனால் அப்படியொரு நேரடி வார்த்தையைச் சம்பந்தன் தனது ஆங்கில உரையில் கூறவில்லை.
இருந்தாலும் உரையின் முழுப்பகுதிக்கும் அந்தத் தலைப்பு பொருந்தும் என்ற அடிப்படையில் நான் அவ்வாறு தலைப்பிட்டிருந்தேன்-(அன்று நான் இரவுக் கடமை என்பதால் செய்திக்கு நானே தலைப்பிட முடிந்தது) அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் என்னை நேரில் சந்தித்த சம்பந்தன் நீங்கள் இட்ட தலைப்பு தனது உரைக்குப் மிகப் பொருத்தமானது என்று கூறினார்.
13 ஐ தும்புத்தடியாலும் கூடத் தொட்டுப் பார்க்கமாட்டோம் (We will not even touch the 13th Amendment by the Broom) என்று அவர் கூறியதையும் முக்கியப்படுத்தி எழுதியிருந்தேன். ஆங்கிலத்தில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்தால் துடைப்பம் என்றுதான் வரும்.
ஆனால் சரியான பொருள்கோடலுடன் தமிழில் அதனை மொழிபெயர்த்தால் தும்புத்தடி என்றுதான் வரும்- ”தும்புத் தடியாலும்” என்று மொழிபெயர்த்து எழுதியிருந்ததையும் சரியான தமிழ்ச் செற்பதம் என்றுதான் சம்பந்தன் என்னிடம் சொல்லிப் பொருமைப்பட்டிருந்தார்.
தும்புத் தடியாலும்கூடத் தொட்டுப் பார்க்க முடியாது என்று சம்பந்தன் கூறிய அந்தக் கருத்தை நான் எனது அரசியல் பத்தி எழுத்துக்களிலும் பல தடவை சுட்டிக்காட்டியிருக்கிறேன். அத்துடன் என்னிடம் அரசியல் விஞ்ஞானம் படிக்கும் மாணவர்களுக்கும் 13 பற்றி விரிவுரை நிகழ்த்தும்போதும் சம்பந்தன் இவ்வாறு கூறினார் என்று சொல்லியிருக்கின்றேன்- அதனாலேயே இந்தக் கருத்துப் பிரபல்யம் அடைந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
2001 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டுவரை சம்பந்தன் ஆங்கிலத்தில் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து வெளியிட்டால், வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்பே (North East Combined Autonomous Structure) ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்த அரசியல் தீர்வு என்பது வெளிப்படும். மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் சந்திரிகா, மகிந்த ஆகியோர் முன்மொழிந்த பரிந்துரைகள், உறுதிமொழிகள் பற்றிய விபரங்கள் சம்பந்தனின் நாடாளுமன்ற உரைகளில் இருந்தே தொகுப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் தீர்வு யோசனைகள், மங்கள முனசிங்க ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்துப் பரிந்துரைகள் மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் கூறிய அறிவுரைகள், ஐக்கிய நாடுகள் சபை அவ்வப்போது இலங்கை தொடர்பான அறிக்கைகளில் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் சம்பந்தன் அக்குவேறு ஆணிவேறாக சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். ஆனால் 2009 இற்குப் பின்னர் முற்று முழுதாக மாறி ஒற்றையாட்சியை (unitary state) ஏற்கும் மன நிலையிலேயே பேசுகிறார் சம்பந்தன்.
ஆகவே 2009 வரையான அத்தனை உரைகளையும் தொகுத்தால் தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகும். 2001 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரையான மாவீரர் நாள் உரைகள் கூட தமிழ் நெற்றில் வரும் ஆங்கிலப் பிரதியைக் கொண்டு வந்து அதில் கூறப்பட்டுள்ள பிரதான அம்சங்களைச் சம்பந்தன் நாடாளுமன்றத்தில் வாசித்துமிருக்கிறார்.
ஆங்கிலத்தில் மற்றுமொரு மாவீரர் நாள் உரை என்று நாங்கள் நாடாளுமன்றச் செய்தியாளர் களரியில் இருந்து சிரித்துப் பேசியிருந்தோம்- என்னுடன் அப்போது சக செய்தியாளராகக் கடமையாற்றியவர் R. Priyadharshini Sivarajah. (தற்போதைய தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர் .சிவராஜாவின் மனைவி)
தகவல் - மூத்த பத்திரிகையாளர் அமிர்தநாயகம் நிக்சன்