காத்திருக்கும் சசிகலா; ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட திருப்பம். ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சிக்காகவும், அதிமுக தன் பக்கம் வர வேண்டும் எனவும் சசிகலா காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே அதிமுக தோல்வியை தழுவியினாலும், அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் யாரும் அவரை நேரில் சந்திக்கவில்லை. ஆனால் சசிகலா தரப்போடு பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். இதனால் தனது வேளைக்காக சசிகலா காத்துக்கொண்டிருப்பதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி முன்னேறினாலும், அதிமுக வீழ்ச்சியை தான் சந்தித்து வருகிறது. ராஜ்யசபாவிலும் அதிமுகவின் பிரதிநிதித்துவம் குறைந்து விட்டது. அதேவேளையில், அதிமுக மீது பல ஊழல் புகார்களை கூறி பட்டியல் ஒன்றை திமுக ஏற்கனவே ஆளுநரிடம் வழங்கியிருந்தது. இந்நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கந்தசாமி ஐபிஎஸ் பதவியேற்றிருக்கிறார்.
இவர் சிபிஐ அதிகாரியாக மும்பையில் பணியாற்றியபோது, குஜராத்தின் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர். அதோடு அரசியல்வாதிகள் பலரை அலறவிட்டவர்.எனவே அவரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமித்திருப்பது எடப்பாடிக்கு எதிரான ஸ்டாலினின் ஒரு வலிமையான நடவடிக்கைக்கு துவக்கப் புள்ளி என சசிகலா கருதுகிறாராம்.
அதுமட்டுமல்லாது புதிய முதல்வர், பதவியேற்றதும் நேராக பிரதமரை சென்று சந்திப்பது வழக்கம். கொரோனா காரணமாக ஸ்டாலின் இன்னும் அங்கு செல்லவில்லை. இந்த நிலையில் அவரது பயணத்தை சசிகலா ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறாராம். ஏனெனில் இதேபோல் பிரதமரை சந்தித்துவிட்டு திரும்பிய பின் ஜெயலலிதா தனது ஆளுமையில் பல வித அதிரடியான அணுகுமுறைகளை மேற்கொண்டிருந்தார்.
இதேபோல் ஸ்டாலினும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து அதிமுகவுக்கு எதிராக பிரதமரிடம் பேசக்கூடும் என எதிர்பார்க்கிறார் சசிகலா. அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளில், பாஜகவின் தலையீடு வேண்டாம் என்றும் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தலாம். இதனால் தனக்கும், தினகரனுக்கும் நடந்தது நாளை பழனிசாமிக்கும் நடக்கலாம் என எண்ணி வருகிறாராம் சசிகலா.
எனவே ஸ்டாலினின் டெல்லி பயணத்துக்காகவும், அதன் பின் நடக்கும் அரசியல் மாற்றங்களுக்காகவும் பொறுமையுடன் சசிகலா காத்திருப்ப்தாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.