ஏ9 வீதியில் இராணுவத்தினரை மோதித்தள்ளிய வாகனம்; இருவருக்கு நேர்ந்த கதி!
வவுனியாவில் சட்டவிரோத மரங்களை ஏற்றிச்சென்ற வாகனம் மோதியதில் இரு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தை நகர்பகுதியில் அமைந்துள்ள சோதனைசாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர்.
இதன்போது மரக்கடத்தல்காரர்கள் வாகனத்தினை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றதுடன் கடமையில் இருந்து இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர்.
இதன் காரணமாக நீண்டதூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இராணுவ வீரர் ஒருவர் வீதியில் வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றொரு சிப்பாயும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தில் காயமைடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மரங்களை கடத்திச்சென்ற வாகனம் வீதிக்கரையில் விபத்திற்குள்ளாகிய நிலையில் அதன் சாரதி தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.