கறுப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தை நடத்திய வடமராட்சி மீனவர்கள்!
வடமராட்சி மீனவர்கள் கறுப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் 5 வது நாளாக நேற்றைய தினம் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
வரமராட்சி மீனவர்கள் கடந்த 31-01-2022 ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்று முன்தினம் (03-02-2022) வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03-02-2022) குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளமை, பொதுமக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு விளைவித்தல், கொரோனா அபாயம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பருத்தித்துறை பொலிஸார், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் போராட்டத்திற்கு எதிராக தடையுத்தரவை பெற்றனர்.
நீதிமன்ற தடையுத்தரவை நேற்று முன்தினம் அடுத்து இரவு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தினை கைவிட்டனர். இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தினை கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த மாதம் 27-01-2022ஆம் திகதி கடலுக்கு சென்ற வத்திராயன் மீனவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், இதுவரை காலமும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து மெழுகு திரிகளை ஏந்தி, கறுப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.