யாழ்.கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகள்!
யாழ்.கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் கூறியுள்ளார்.
அத்துடன், கோட்டை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சமூகச் சீரழிவு நடவடிக்கைகள்
யாழ்.கோட்டை பகுதியை நேற்றைய தினம் பார்வையிட்ட மாநகர முதல்வர், அங்கு இடம்பெற்றுவரும் அநாகரிக செயற்பாடுகள் தொடர்பில் அவதானித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து இதன் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர்,
கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் இனங்காணப்பட்டால், அவர்களை கடுமையாக எச்சரித்து பொலிஸார் ஊடாக பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோட்டை பகுதி சமூகச் சீரழிவு நடவடிக்கைகள் மற்றும் போதை பொருள் பாவனை மையமாக மாறிவருகிறது.
எனவே கோட்டை பகுதியை சுற்றியுள்ள பற்றைக் காடுகளை அகற்றுமாறு நீதிபதிகள் மாநகர சபையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆகவே கோட்டை பகுதியை சுற்றியுள்ள பற்றைக்காடுகளை உடனடியாக அகற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
மேலும் யாழ் கோட்டை பகுதி தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருப்பதால் தொல்லியல் திணைக்களத்தினருடன் பேசி இதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.