திருக்கோணமலை வைத்தியசாலை இடமாற்றம் தொடர்பில் முக்கிய தகவல்!
திருக்கோணமலை வைத்தியசாலையின் இடமாற்றம் மற்றும் ஜய்கா வழங்கவிருக்கும் கட்டடத்தொகுதி என்பவற்றை பெரியகுளம் மற்றும் இலுப்பைக்குளம் சந்திக்கும் பகுதிக்கு கொண்டுவருவதற்கான நியாயபூர்வமான தொழிநுட்பம் சார்ந்த கருத்துக்களை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
பொதுவாக முகநூல்கள் மற்றும் வாட்சப் குழுமங்கள் பலவற்றில் ஒரு சிலர் பரப்பிய தேவையற்ற குழப்பங்களுக்கு மிகத்தெளிவாக ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களோடு அவர் தெளிவு படுத்தினார்.
குறிப்பாக இடப்பரப்பு, கழிவகற்றல், கட்டடங்களின்_தன்மை, எதிர்காலத்திட்டங்கள் என்று அனைத்திற்கும் தெளிவான விளக்கம் கொடுத்திருந்தார்.
தொழிநுட்பரீதியான நியாயாதிக்கங்களை சிவில் சமுகப்பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டதோடு ஐய்கா திட்டத்தின் நிதி திரும்பி சென்றுவிடும் என மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகத்தை கேட்ட போது நிதி ஒருகாலமும் திரும்பிப்போகாது எனவும் வைத்தியசாலை ஏற்கனவே இருக்கும் இடத்திலோ அல்லது புதிதாக முன்மொழியப்பட்ட இடத்திலோதான் அமையும் எனவும் இது வேறு பகுதிகளுக்குச் செல்லாது எனவும் ஆளுனர் உறுதியளித்தார்.
மேலும் இவ்வளவு காலமும் இல்லாமல் ஏன் திடீரென்று இடம் மாற்றுகிறீர்கள் எனக்கேட்டபோது பணிப்பாளர் அவர்கள், திடீர் என்று இல்லை 2018/19 களில் சம்பந்தன் ஐயா காலத்தில் இருந்து காணியை விஸ்தரிக்க முயற்சி எடுப்பதாகவும் அது பயனளிக்காதபடியாலேயே இந்த இடமாற்ற முயற்சி எடுப்பதாகவும்,
இதுவரை தனது வைத்தியசாலையை விரிவாக்கும் விசேட திட்டதிற்கு எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்றும் தனது திட்டத்தினை சரியாக செயல்படுத்தினால் இலங்கையின் அழகான மூன்றாவது பெரிய வைத்தியசாலையாக கொண்டுவரமுடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வைத்தியசாலை முற்றாக. இடமாற்றப்படுமா என்ற சந்தேகத்திற்கு முற்றாக இடமாற்றப்படாது ஆரம்பகட்ட வைத்தியநிலையம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அவை தவிர புதிய கட்டடம் அமைக்கப்பெறுவதற்கான சவால்கள், மத்தியசுற்றாடல் அதிகாரசபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கை, கட்டடம் அமையப்பெறும் மண்ணின் தன்மை, தற்போதைய கழிவுகள் எரிக்கப்படுவதால் மனையாவெளி மற்றும் வைத்தியசாலை அண்டிய மக்கள் பாதிக்கப்படும் தன்மை, புதிய கட்டடத்தின் முன் புதிய கட்டடத்தின் பின் வாகனத்தரிப்பிடம் நோயாளர் போக்குவரத்து மற்றும் இந்த கட்டடம் அமையப்பெற்றால் இனி வரும் காலங்கள் பாரிய கட்டடத்தொகுதி அமைக்கும் திறன் போன்றவையும் பேசப்பட்டது.
அத்தோடு ஜய்காவின் கட்டடத்தொகுதியோடு ஆரம்பிக்கும் புதிய வைத்தியசாலைத் தொகுதிக்கு மேலும் கட்டடத்தொகுதிகள் கொண்டுவரும் முறைகளும் தெளிவுபடுத்தப்பட்டது.
இத்தகைய தெளிவுபடுத்தல்கள் முன்னரே மக்கள்மட்ட அமைப்புக்களுக்கு செய்திருந்தால் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்திருக்க முடியுமென பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதன்போது ஆளுனர் சமுக மட்ட அமைப்புக்களுக்கு போதுமான தெளிவை வழங்காமைக்கு அதிகாரிகளைக் கடிந்துகொண்டதோடு அதனைச் செய்யுமாறும் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு எதிர்மறைக்கருத்துகளும் சந்தேகங்களும் கொண்டிருந்த சமுகமட்டப்பிரதிநிதிகள் இதில் உள்ள நன்மை தீமைகள் தெளிவு என்றால் அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு சரியானதை செய்து ஒரு நல்ல விடயத்தை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
தங்களுக்கு போதுமானதெளிவு கிடைத்தது என்றும் எனினும் ஏனைய சில சமுகமட்ட அமைப்பினருக்கும் தாங்கள் தெளிவுபடுத்திய பின்னர் தங்கள் வெளிப்படையான கருத்துக்களை தெரிவிக்கமுடியும் எனவும் தெரிவித்தனர்.