ஜேர்மனியில் மூடும் நிலையில் இருந்த பல்கலைகழக தமிழ் பிரிவு; காப்பாற்றிய தமிழர்கள்
மூடும் நிலையில் இருந்த தமிழ்ப் பிரிவை வரும் 2023ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாக ஜேர்மனின் கொலோன் பல்கலைக்கழகம் (University of Cologne) அறிவித்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் (University of Cologne) இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்விப் பிரிவில் தமிழுக்கானக் கல்வி கடந்த 58 ஆண்டுகளாக போதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் , நிதி நெருக்கடியால் கடந்த நவம்பர் 2020 முதல் தமிழ்ப் பிரிவை மூடுவதாக கொலோன் பல்கலைக்கழக (University of Cologne)நிர்வாகம் தெரிவித்தது. அதன்பின், தமிழ்ப் பிரிவை காக்க ஜெர்மனி வாழ் தமிழர்கள் மற்றும் ஐரோப்பியத் தமிழர் கூட்டமைப்பு என்பற்றின் முயற்சியால் புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டது.
அதோடு இதற்காக தமிழக அரசிடமும் நிதி உதவி கேட்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ரூ.1.25 கோடியும், ஐரோப்பியத் தமிழர் கூட்டமைப்பு சார்பில் ரூ.23 லட்சமும் நிதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவை மார்ச் 2023ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஜேர்மன் கொலோன் பல்கலைக்கழகம் (University of Cologne), கடந்த 1963இல் தொடங்கியது முதல் தமிழ்த் துறையில் சிறந்த ஆய்வாளர்களையும், வல்லுநர்களையும் உருவாக்கி உள்ளது.
இதன் பேராசிரியர்களில் ஒருவரான உல்ரிக் நிக்லஸ், தமிழக அரசின் ஜி.யு.போப் விருதை கடந்த ஆண்டிலும், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை நடப்பு ஆண்டிலும் பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இங்கு மேற்கத்திய நாடுகளின் மிகப்பெரிய தமிழ் நூலகமும் அமைந்துள்ளது. அந்த நூலகத்தில் ஆய்வுக்கு உதவும் வகையில் சுமார் 40,000 தமிழ் நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.