மிரட்டும் கொரோனா ; குடும்பத்துடன் சென்னையை விட்டு வெளியேறிய ஸ்டாலின்!
சென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், சென்னையை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் சராசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 8 ஆயிரத்தை நெருங்கி விட்டது.
குறிப்பாக சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 2,500க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
அதோடு , தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின், குடும்பத்துடன் 2 தனி விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக் குழந்தைகள் உள்பட 17 பேர் சென்றுள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து கொடைக்கானலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் , சென்னையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால், கொஞ்ச காலம் சென்னைக்கு வெளியே இருக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.