ஜனாதிபதியிடம் பிரத்தானிய அமைச்சர் வெளியிட்ட தகவல்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடைமுறைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைவாக மனித உரிமைகள், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாக பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை (18-01-2022) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
அதுமாத்திரமன்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அமைச்சர் தாரிக் அஹமட்டுக்கும் இடையிலான சந்திப்பின்போது, மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் மிகவும் முன்னேற்றகரமானவையாக உள்ளதாக அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்தார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியின் பின்னரான பொருளாதார மீட்சி மற்றும் காலநிலை மாற்றம் உள்ளடங்கலாக அனைத்து நாடுகளும் முகங்கொடுத்திருக்கக்கூடிய சவால்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் (Gotabaya Rajapaksa) சந்திப்பொன்றை நிகழ்த்தியிருந்ததாக பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடைமுறைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைவாக மனித உரிமைகள், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் விசேட அவதானம் செலுத்தக்கூடிய வகையில் மனித உரிமைகள் விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.