நாடு வங்குரோத்து விளிம்பில் இல்லை! ஜி.எல்.பீரிஸ்
இலங்கைக்கு தேவைப்படும் நேரத்தில் நட்பு நாடுகள் உதவி வருகின்றன. எனவே நாடு வங்குரோத்து விளிம்பில் இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை (22-01-2022) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை இந்தியாவிடம் இருந்து பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் சீமெந்து ஆகியவற்றைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் 1 பில்லியன் அமெரிக்க டொலரையும் எரிபொருள் கொள்வனவு செய்ய 500 மில்லியன் அமெரிக்க டொலரையும் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரிக்க 400 மில்லியன் அமெரிக்க டொலரையும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கண்டி, கெட்டம்பேயில் மேம்பாலம் அமைப்பதற்கு ஹங்கேரி அரசாங்கம் பணம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. சீனாவும் 1 மில்லியன் மெட்ரிக்தொன் அரிசியை வழங்க உறுதியளித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பையும் அரசாங்கம் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் பொது வாக்கெடுப்பு நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை.
மாறாக அடுத்த மூன்று வருடங்களில் தனது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.