கொழும்பு மற்றும் அதனை அண்மித்த 30 பிரதேசங்களில் விசேட சுற்றிவளைப்பு
சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த 30 பிரதேசங்களில் நேற்றையதினம் விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் 011-2433333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொது மக்கள் தகவல் வழங்க முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , அண்மையில் வெளியான சில சம்பவங்களின் பின்னர் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
இலங்கையின் சட்டத்திற்கமைய குறிப்பிட்ட வயதெல்லையை விடக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைக்கமர்த்த முடியாது. சர்வதேச சிறுவர் பிரகடனத்துக்கமைய 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிறுவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் 1995 மற்றும் 2006 ஆண்டு இலங்கையின் குற்றவியல் சட்டத்தில் சிறுவர் என்போர் 16 வயதுக்கு உட்பட்டோர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.