ரிஷாட்டை காப்பாற்ற சதித்திட்டங்கள்: உதய கம்மன்பில வெளியிட்ட பரபரப்பு தகவல்
அநியாங்களுக்கு துணை போகும் நபர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் உள்ளதால், சிறுமி இஷாலினி விடயத்தில் ரிஷாட் பதியுதீனை காப்பாற்றும் சதித்திட்டங்கள் ஏதும் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான உதய கம்மன்பில கூறியுள்ளார்.
எனினும், சிறுமி இஷாலினியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரையில் தற்போது முன்னெடுக்கும் விசாரணைகளின் சுயாதீனத்தை பாதுகாக்க தாம் துணை நிற்பதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமி இஷாலினியின் மரணம் எம் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இவ்வாறான சம்பவங்கள் எப்போதுமே இடம்பெறக்கூடாது என்பது எமது பிரார்த்தனையுமாகும். அத்தோடு வறுமையை காரணமாக வைத்து எவரது வாழ்கையையும் நாசமாக்கக்கூடாது.
இஷாலினி விடயத்தில் அவரது மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரையில் அரசாங்கமாக பின்னணியில் நாம் இருப்போம்.
மேலும் இந்த நாட்டில் மேலும் பல இஷாலினிகள் உருவாகக்கூடாது என்பதற்காகவும், எந்தவொரு பெண் பிள்ளையும் இவ்வாறு வேதனைப்படக்கூடாது என்பதற்காகவும், வீட்டுப்பணிகளுக்கு இவ்வாறு சிறுவர்களை இணைப்பதில் அச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த விசாரணையின் சுயாதீனத்தை பாதுகாப்போம்.
அத்தோடு இந்த சிறுமியின் விடயத்தில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களும் ஏதோவொரு அழுத்தங்கள் இருந்துள்ளன.
சஹ்ரான் விடயத்தில் இடம்பெற்ற சதித்திட்டமே இங்கேயும் இடம்பெறுகின்றது. ஆனால் இனியும் அவ்வாறான தவறுகள் இடம்பெறாதென நாம் வாக்குறுதியளிக்கின்றோம்.
இந்த விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாக செயற்படுகின்றது என்பது சகலருக்கும் இப்போது விளங்கியிருக்கும். ரிஷாத் பதியுதீனை அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக்கொள்வதாக இருந்தாலோ அல்லது அவருடன் “டீல்“ அரசியல் செய்வதாக இருந்தாலோ இன்று அவர்களை குடும்பத்துடன் கைது செய்திருக்கமாட்டோம்.
மேலும் இதற்கு முன்னைய காலங்களிலும், நல்லாட்சி காலத்திலும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நானே அதிகளவில் முறைப்பாடுகளை செய்துள்ளேன்.
இந்த நாட்டில் உருவாகியுள்ள மிக மோசமான அரசியல்வாதி ரிஷாட் பதியுதீன் என்பதே எனது கருத்தாகும். அதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால் ரிஷாட் பதியுதீனை காப்பாற்ற நினைக்கும் நபர்கள், இன்றும் அரசாங்கத்தில் உள்ளனர்.
அத்தோடு இவர்கள் 1994-2014 ஆம் ஆண்டு காலங்களில் ரிஷாட் செய்த அநியாயங்களையும் ஆதரித்தது பாதுகாத்து வந்தனர். அவர்கள் இன்றும் அரசாங்கத்திற்குள் உள்ளனர்.
எம்முடன் அரசாங்கத்தில் ரிஷாட் பதியுதீன் அங்கம் வகித்த போதும் நானும் அமைச்சர் விமல் வீரவன்சவும் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.
மேலும் இன்றும் அதே நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திற்குள் வரக்கூடாது. இப்போதும் அவர்களின் அணியில் சிலர் எனக்கு ஆதரவாக நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களித்திருக்க முடியும்.
ஆனால் அவர்களின் ஆதரவை நான் ஒருபோதும் கேட்கவில்லை. அதேபோல் அவர்களை அரசாங்கத்திற்குள் இணைத்துக்கொண்டு பயணிக்க ஏதேனும் சக்திகள் அரசாங்கத்திற்குள் இயங்குகின்றதா என்ற சந்தேகமும் எம்மத்தியில் உள்ளது.
அவ்வாறு இடம்பெறுமானால் நாம் இந்த அணிக்குள் இருப்பதில் அர்த்தமில்லை.மேலும் ஜனாதிபதி ஒருபோதும் அவ்வாறான தவறை செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.