அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!
அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சிலையின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
அத்துடன், இதற்கு அடுத்துள்ள பச்சைபங்களா தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடித்துள்ளதுடன், இதற்கு அடுத்த தோட்டமான உருலேக்கர் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலிலும் இவ்வாறே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
அக்கரப்பத்தனை நகருக்கு அருகிலுள்ள அடுத்தடுத்த தோட்டங்களில் ஓரே நாளில் இவ்வாறு கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ள நிலையில், பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை பிரிவினரும் சம்பவம் இடம்பெற்ற கோவில்களுக்குச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.