இலங்கையில் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு பண்டத்தின் விலை!
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60 ரூபா வரை அதிகரிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை இலங்கை பால் சங்கத்தின் உப தலைவர் மஞ்சுள நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக 2020ஆம் ஆண்டு 30 ரூபாவாக இருந்த யோகட்டின் விலை தற்போது 50 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும் உற்பத்தியாளருக்கு இலாபம் இல்லை என மஞ்சுள நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் பால் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் யோகட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.