பதவி விலகலை அதிகாரபூர்வமாக அறிவியுங்கள்; கோட்டாவிடம் வலியுறுத்தும் மதத் தலைவர்கள்
ஜனாதிபதி கோட்டகய ராஜபக்ஷவின் ஆணை தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தி உத்தியோகபூர்வ பதவி விலகலை உடனடியாக அறிவிக்குமாறு மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபாநாயகர் விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டி தேர்தல் நடைபெறும் வரை குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

மத தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
முழு நாட்டினாலும் கட்சித் தலைவர்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய தலைவர் ஒருவரை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு வெளியில் உள்ள ஒருவரை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து அவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை எக்காரணம் கொண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு நொடி கூட ஜனாதிபதியாக நியமிக்கக் கூடாது என குறிப்பிட்ட தேரர், ஜனாதிபதி ராஜபக்ஷ தனது இராஜினாமாவை தாமதமின்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும் புதிய ஜனாதிபதியை தற்காலிகமாக நியமிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.