சீனாவிடம் புதிய கடன்; இலங்கை குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் கருத்து !
சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது.
இந்த நிலையில், இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார் என சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் கருத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பமானதிலிருந்தே இரு நாடுகளும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்திவருகின்றன.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி என்பவற்றுக்கு அவசியமான உதவிகளை சீனா எப்போதும் வழங்கியது என சுட்டிக்காட்டிய அவர் எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கை தொடரும் என உறுதியளித்துள்ளார்.
சீனாவிடமிருந்து புதிதாகக் கடன்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஓரளவிற்கு முன்னேற்றகரமான நிலையில் இருப்பதாகவும் இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இதன்போது கூறினார்.