மன்னார் பகுதியில் உள்ள மதுபான கடை ஒன்றில் கூட்டம் கூட்டமாக நின்ற மதுபிரியர்கள்!
மன்னார் பகுதியில் உள்ள மதுபான கடையில் மதுபொருட்கள் கொள்வனவு செய்ய மதுபிரியர்கள் கூட்டம் கூடியதால் பெரும் பதற்றநிலை நிலவியுள்ளது.
மன்னார் பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தில் நேற்று மாலை சுகாதார நடை முறைகளை கடைபிடிக்காது பலர் மதுபானப் பொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடித்துள்ள போதும் குறித்த பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன் இரவு முதல் எதிர்வரும் மூன்று தினங்கள் நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுபான சாலைகளை மாலை 6 மணியுடன் மூடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மூன்று தினங்கள் மதுபான சாலைகள் மூடப்பட உள்ளதால் இன்று மாலை மன்னாரில் உள்ள மதுபான சாலைகளுக்கு முன் அதிகளவிலான மது பிரியர்கள் கூடியிருந்தனர்.
மது விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வீதி முழுவதும் மோட்டார் சைக்கிள் உட்பட தமது வாகனங்களை நிறுத்தி விட்டு சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொள்ளாது மது பிரியர்கள் மதுபான பொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடித்தனர். மதுபான சாலைகளுக்கு முன் பிரதான வீதியில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதுடன், மாலை 6 மணிக்கு மதுபான சாலைகளை மூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.
மது பிரியர்கள் எதிர்வரும் 3 தினங்களுக்கு தேவையான மதுபான பொருட்களை கொள்வனவு செய்துச் சென்றுள்ளனர். சுகாதார நடை முறைகளை மீறி அதிக அளவிலான கூட்டம் காணப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும், மாலை 6 மணிக்கு பின்பே குறித்த பகுதிக்கு வந்ததாகவும் தெரிய வருகின்றது.
இதனால் குறித்த பகுதியில் நீண்ட நேரம் சுகாதார நடை முறைகள் பின்பற்றப்படவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தள்ளனர்.