3 வயது சிறுமியின் உயிரைக் காவு கொண்ட பரல்
மட்டக்களப்ப்பில் சிறியரக பிளாஸ்ற்றிக் பரல் ஒன்றினுள் தவறி வீழ்ந்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துயர சம்பவம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி மாரியம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்று பிற்பகல் சிறுமி வீட்டிலிருந்த வேளை நீர்நிரம்பிய சிறியரக பிளாஸ்ற்றிக் பரலில் கையிலிருந்த ஜம்பு பழத்தை போட்டுள்ளார். பரலில் விழுந்த பழத்தை எடுக்க முயற்சித்த வேளை சிறுமி பரலினுள் தலைகீழாக தவறி வீழ்ந்துள்ளார்.
தந்தை உறவினர் வீடொன்றிற்கு வெளியில் சென்றிருந்த நிலையில் தங்கை வீழ்ந்துள்ளதை அவதானித்த சிறுமியின் 5 வயதுடைய சகோதரன் வீட்டிற்குள் சமைத்துக் கொண்டிருந்த தாயிடம் விடயத்தை கூறியுள்ளார்.
விரைந்து வந்து மகளை மீட்டதாய் அயலவர்களின் உதவியுடன், சிறுமியை உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலைக்குக் கொண்டு சென்ற போதும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.