யாழில் ஏலம் விடப்படவுள்ள இந்திய இழுவை படகுகள்!
இந்திய இழுவை படகுகள் யாழ்.காரைநகரில் ஏலம் விடப்படவுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட படகுகளே இவ்வாறு ஏலம் விடப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கை தொடர்பில் நேற்று முன்தினம் மருதங்கேணியில் நடைபெற்ற மீனவர் போராட்டத்தின்போது கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழுவைப்படகுகள் ஏலத்திற்கு விடப்படும்போது கிடைக்கும் பணத்தினை, இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதேபோல, அத்துமீறும் இந்தியப் படகுகளை பிடிக்கவும், இடிக்கவும் குறித்த படகுகள் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தல் விற்பனை செய்யப்படவுள்ளன.
அந்த வகையில் காரைநகரில் உள்ள படகுகள் ஏலம்விடும் பணி தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இப் பணி இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








