எரிபொருள் விலை அதிகரிப்பு; பஸ் கட்டணத்தில் மாற்றமா?
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பினும், பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கான சந்தர்ப்பம் இருந்த போதிலும், கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், இறுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் தமது கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என சகல சங்கங்களின் பிரதிநிதிகளும் தமக்கு உறுதியளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் பஸ் கட்டணங்களில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.